காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் மனு



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் மனு




காவிரி உரிமை மீட்பு பயணத்தை நிறைவு செய்த ஸ்டாலின், அனைத்து கட்சி தலைவைர்களுடன் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அனைத்து கட்சித்தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,


‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால் மத்திய அரசு அதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் போக்கால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இது பற்றி நாங்கள் இன்று ஆளுநரிடம் தெளிவாக எடுத்து கூறினோம்.


மே மாதம் 3-ஆம் திகதிக்குள் காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை மத்திய அரசு காத்திருக்கக்கூடாது. அதற்கு முன்னதாக வரைவு திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் சார்பில் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு ஆளுநர் ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக தமிழ்நாட்டில் இருந்து விவசாயி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. இது தொடர்பாக எந்த கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று பொன். ராதாகிருஷ்ணனே கூறி விட்டார்.

இதுநாள் வரை பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச முடியவில்லை. எனவே பிரதமரை சந்திக்க நீங்கள் (ஆளுநர்) ஏற்பாடு செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தோம். ஆளுநரும் பிரதமரை சந்திப்பதற்கு திகதி வாங்கி தருவதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் செயல்படாத அரசு உள்ளது. இதுபற்றியும் ஆளுநரிடம் எடுத்து கூறினோம்.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி பேச உள்ளோம். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இது நாடகமாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.’ என்றார்

Comments

Popular Posts